இந்த கதை நடந்த இடத்தை நான் சொல்லப் போவதில்லை. ஆனால் என்னென்ன நடந்தன என்பதை மட்டும் சொல்கிறேன்.
* புறம்போக்குப் பகுதி * வெட்டவெளிப் பகுதி * காட்டுப் பகுதி * பொதுக் கழிப்பறைப் பகுதி * குப்பைத் தொட்டிப் பகுதி - இவற்றுள் ஏதாவது ஓர் இடத்தில் இந்தக் கதை நடந்திருக்கலாம்.
அந்த இடத்தில் மொத்தம் 12 பேர் உட்கார்ந்திருந்தனர். அவர்களுள் அடியேனும் ஒருவன்.
சற்று குண்டான ஆசாமி ஒருத்தன், நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தான். அரைகுறைத் தூக்கத்திலேயே எழுந்தான். போதைப் பாக்குப் பொட்டலத்தைப் பிரித்தான். கையில் வைத்து நன்றாக நசுக்கினான்.
பெண்கள் பேன் பொறுக்குவது போல, சில துணுக்குகளை எடுத்து வெளியே போட்டான். மீண்டும் நசுக்கினான். தன் புனித உமிழ்நீரை வடித்து, அதை கொஞ்சம் ஈரமாக்கினான். ஒரு குழல் மாத்திரை அளவுக்கு உருட்டி, தன் கடைவாய்ப் பல்லில் வைத்தான்.
சற்று நேரத்தில் ஆடுமாடு போல் சப்பு சப்பென்று அசை போட்டான். அதில் சில புனித உமிழ்நீர்த் துளிகள் எதிரே அமர்ந்திருந்த மனிதப் பூச்சிகள் மீது தெறித்தன. அதற்கு அவன் என்ன செய்வான் பாவம்? உமிழ்நீரைக் கேட்க வேண்டிய கேள்வி. நன்றாக போதை ஏறும் வரை, பாக்குச் சாறை சப்பியவன், தான் அமர்திருக்கும் இடத்திலேயே குனிந்து, பளிச்சென துப்பினான்.
அடுத்து ஒல்லியான ஒரு நபர். அச் அச் அச் என நாலைந்து முறை தும்மினான். தன் திரு மூக்கில் சுரந்த சளியை பிளாச் சென பிடித்து, சுண்டி வீசினான். மேலும் மேலும் அவனுக்கு சளிகள் சுரந்து கொண்டே இருக்க, ஆவேசத்தில் மூக்கின் இடது துவாரத்தை அடைத்து விட்டு, "பூப்" என சீந்தினான் பாருங்கள். அங்கு அமர்ந்திருந்த எல்லா மானிடர்களின் மீதும் திருப்பொழிவு நடந்தது.
மேலும் வெற்றிலைச் சாறை ஈஸ்ட்மென் கலரில் துப்பிய வேட்டிக்காரர். பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு, எண்ணெய் தேய்த்த தாளை சுருட்டி வீசிய பெரியவர்; செல்பேசியில் வானொலிப் பாடலை அலறவிட்டு, எல்லோருக்கும் இலவச தலைவலி கொடுத்த மாணவன்.
அந்த இடத்தின் சுவரைப் பார்த்தால், '"சேகருக்கும் லதாவுக்கும் காதல்" மற்றும் "இந்த நடிகன் ஒரு புறம்போக்கு" "அந்த நடிகன் ............. மகன்" முதலிய குழாயடிச் சண்டைகளில் பயன்படுத்தும் செம்மொழிச் சொற்கள் இடம்பெற்றிருந்தன.
இப்படி ஆளாளுக்கு தங்களால் முடிந்தளவுக்கு அந்த இடத்துக்கு ஏதாவது ஒரு சேவை செய்து கொண்டிருந்தனர். கடைசியாக ஒரு பெண்மணி. இவளைப் பற்றி சொல்லவில்லை எனில், நான் பிறந்ததற்கு பொருளே இல்லை.
வயது 35 இருக்கும். தன் நாக்கைத் தவிர உடல் எல்லா பகுதிகளிலும் அணிகலன்களைப் பூட்டி, ஏறக்குறைய சுசீந்திரம் தேர் போல தோன்றினாள்.
இடது கையில் 2-3 வயது குழந்தை. ஆணா பெண்ணா என தெரியவில்லை. வலது கையில் மினரல் வாட்டர் பாட்டில் வைத்திருந்தாள். இந்தப் பாட்டில் த்ரீஇன்ஒன் பணிகளைச் செய்யப் போகிறது.
தன் பையிலிருந்து ஒரு பொட்டலத்தைப் பிரித்து, தோசையை சாப்பிட்டு ஏப்பம் விட்டாள். அவ்வப்போது, மினரல் வாட்டர் குடித்தாள். அடுத்து, சாப்பிட்ட தாளையும் இலையையும் கசக்கி சுருட்டி அதே இடத்திலேயே போட்டாள்.
அடுத்து, தன் எச்சில் வாயையும் கையையும் அதே மினரல் வாட்டராலேயே கழுவினாள். தன் முகத்தையும் அதே தண்ணீராலே கழுவிவிட்டு, கண்ணாடியில் முகம் பார்த்தாள்.
கடைசியாக அவள் செய்ததுதான், கின்னசில் இடம்பெற வேண்டியது. அந்தக் குழந்தை எதற்கோ அழ, புரிந்துகொண்டு, அந்த இடத்தின் ஓரத்தில் ஒதுக்கி, ஒண்ணுக்கு நிற்க வைத்தாள். முடிந்தவுடன் நனைந்த அதன் ஜட்டியை, அந்த மினரல் தண்ணீரால் அதே இடத்தில் அலசினாள்.
சரி, இப்போது இந்த கதை நடந்த இடத்தை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களா? சரி நானே சொல்கிறேன்.
சென்னை - புறநகர் மின்தொடர் வண்டியிலுள்ள ஒரு பெட்டியில்தான் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
"இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா வல்லரசு ஆகப் போகிறது" என நம் முன்னாள் குடியரசுத் தலைவர் - கனவு கண்டு தூக்கத்தில் சிரித்துக் கொண்டிருந்தார்.

3 கருத்துகள்:
அடங்கொய்யால..
...வாழ்க பாரதம்!
நன்றி நண்பரே
ஒளிர்ஞர்
அருமை
கருத்துரையிடுக