அறிவியல் புதினம்
இன்னும் 12 நாட்களுக்குள் ஓர் புதுமை நடக்கப் போகிறது. பூமியில் இறந்து போன புகழ்பெற்ற மாமனிதர்கள் எல்லோரும் உயிருடன் வரப் போகிறார்கள். புத்தர், காந்தி, மகாவீரர், நேதாஜி, ஐன்ஸ்டீன், அன்னை தெரசா, அம்தேத்கார், அண்ணா, காமராஜர், எம்ஜிஆர், சிவாஜி, சத்யஜித்ரே, சாக்ரடீஸ், நெப்போலியன் முதலிய புகழ்பெற்றோர் உங்கள் முன் நேருக்கு நேராக நடமாடப் போகிறார்கள்.
என் பெயர் அறிகேசி. அறிவியல் ஆர்வத்தால் வைத்துக் கொண்ட புனைபெயர். என் மீது, உலக வல்லரசுகளில் ஒன்று கொலைக் குற்றம் சுமத்தியது. அதன் அடிவருடி நாடுகள் அதற்கு தாளம் போட்டன. காரணம் இதுதான். மனிதனின் தலையையும், கொரில்லாவின் உடலையும் இணைத்து, புதிய வகை குரங்கு மனிதர்களை உருவாக்க எண்ணியது அந்த வல்லரசு. அன்றைய கருப்பு மனிதர்களுக்கு மாற்றாக இந்த குரங்கு மனிதர்களை அடிமைகளாக வைத்துக் கொள்ள வேண்டுமென திட்டம் தீட்டியிருந்தது.
நான் மட்டும் இந்த திட்டத்துக்கு எதிர்புபுக் குரல் கொடுத்தேன். இது இயற்கைக்கு எதிரான திட்டம் என கூச்சலிட்டேன். நாலைந்து பேர் என்னை கோழி போல அமுக்கி, மயக்க ஊசி போட்டனர். மின் நாற்காலியோ, தூக்குத் தண்டனையோ கிடைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். ஆனால் என்னை கோள் விட்டு கோள் கடத்தி விட்டார்கள்.
இந்த புதிய கோளுக்கு ஞாயிறு என பெயர் சூட்டினேன். இதுவும் பூமியைப் போல் உயிர்வளியைக் கொண்டிருந்தது. ஆனால், நம் நிலவின் பரப்புக்கு இருந்தது.இங்குள்ள மரம் செடிகள் சிவப்பு வண்ணங்களில் இருந்தன. கடல்கள், ஏரிகள், ஆறுகள் மஞ்சள் வண்ணத்தில் ஒளிவீசின. பறவைகளும், நீர்வாழிகளும் வாழ்ந்தன. ஆனால் தரையில் விலங்குகளோ, பூச்சிகளோ, மனிதர்களோ வாழவில்லை.
அந்த ஞாயிறு பந்தில் நான் மட்டுமே தனிமையில் இருந்தேன். என்னைக் கடத்திய புண்ணியவான்கள் ஒரு நல்லது செய்திருந்தார்கள். பூமியில் வெளிவந்த எல்லா திரைப்படங்களின் ஒளிவட்டுகளும், புகழ்பெற்ற தலைவர்களின் ஒளிப்படங்களும், ஒலித்தட்டுகளும், வரலாற்று காலத்து அறிஞர்களின் நூல்களும் உள்ளடக்கிய மின்னல் கணினியை (சூப்பர் கம்பியூட்டர்) என்னோடு அனுப்பி வைத்திருந்தார்கள்.
அதுபோல மரபியல், மின்னணுவியல், நுண்ணுயிரியல் ஆய்வுக்குத் தேவைப்படும் கருவிகளும் என்னோடு இருந்தன. உணவுக்கு சத்துப் பானங்களும், சத்து மாத்திரைகளும் 200 ஆண்டுகளுக்குத் தேவையான அளவில் இருந்தன. ஞாயிறிலுள்ள பறவைகள் என்னோடு நன்றாகப் பழகிவிட்டன. சுவையான பழங்களை எனக்குப் பறித்துத் தந்தன. அன்புக்கு மொழி தேவையா என்ன?
அங்குள்ள மஞ்சள் நிற தண்ணீரும் குடிக்க சுவையாகவே இருந்தது. அதில் ஒரு பறவை நம்மூர் யானையைப் போல் இருந்தது. தும்பிக்கை மட்டும் இல்லாமல், இரண்டு இறகுகளோடு வாழ்ந்தன. அதற்கு 'யாழி' என பெயர் சூட்டினேன். நான் யாழியின் மேல் அமர்ந்து கொள்ள, அது பறந்து சென்று, ஞாயிறின் எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டியது. முதலில் தனிமை எனக்கு இன்பமாகவே இருந்தது. ஆனால் 4-5 ஆண்டுகளில் வாழ்க்கை எனக்கு அலுக்கத் தொடங்கியது.
அப்போதுதான் எனக்கு ஒரு திட்டம் தோன்றியது. அதனை செயல்படுத்த மூளையைக் கசக்கிப் பிழிந்தேன். அதுபோல் புத்தர், சாக்ரடீஸ், ஐன்ஸ்டீன், முதலிய அறிஞர்களின் சிந்தனை மொழிகளை கணினியில் ஓடவிட்டு, அவர்களின் குணம், ஆளுமை, கோட்பாடுகள் இவற்றின் அடிப்படையில் அவர்களின் மரபணுவை (டிஎன்ஏ) அந்த மென்பொருள் துணையால் செயற்கையாக உருவாக்கினேன்.
புத்தருக்கும் சாக்ரடீசுக்கும் உருவங்கள் இல்லாததால், ஏறக்குறைய 75 விழுகாடு மட்டுமே துல்லியமாக அமைந்திருந்தது.அடுத்து, காந்தி, நேதாஜி, ஆபிரகாம் லிங்கன், அம்பேத்கார், விவேகானந்தர், அன்னை தெரசா, ஓசோ, பெரியார், காமராஜர் முதலிய அன்புப் புரட்சியாளர்களின் சிந்தனைகளுடன் அவர்களின் ஒளிப்படங்களையும் இணைக்க, ஏறக்குறைய 90 விழுக்காடு துல்லியத்தில் அவர்களைப் போன்ற மரபணுக்கள் தோன்றின.
திரைப்பட ஒளிவட்டுகளை ஒளிக் கணினியில் ஓடவிட்டு, புகழ்பெற்ற திரைப்பட நடிகர்களுக்கு உயிரூட்ட முயற்சிகளை மேற்கொண்டேன். தியாகராய பாகவதர், பியூ சின்னப்பா, கலைவாணர், டிஏ மதுரம், சார்லி சாப்ளின், சத்யஜித்ரே முதலிய திரைப்பட நடிகர்களின் அசையும் உருவங்கள் மற்றும் பாவங்களைப் படித்து, 95 விழுக்காடு துல்லியமான மரபணுக்கள் உருவாகின.
எம்ஜிஆர், சிவாஜி போன்றோருக்கு வண்ணத் திரைப்படங்கள் அமைந்திருந்ததால், 97 விழுக்காடு துல்லியத்தில் மரபணுக்கள் உருவாகின. முப்பரிமாண (3டி) திரைப்படங்களில் நடித்தவர்களுக்கோ, 99 விழுக்காடு துல்லியத்தில் மரபணுக்கள் வெளிப்பட்டன.
இவ்வாறு மின்னல் கணினியில் உருவாக்கி ஆக்கி வைத்திருந்த 3000 தேர்ந்தெடுத்த பெருமக்களின் மரபணுக்களை வைத்து, அவர்களுக்கு உயிர் கொடுத்து, செயற்கை முறையில் பிறக்க வைத்தேன். மேலும் 21 ஆண்டுகள் கடந்து விட்டன. புதிதாக உருவாக்கப்பட்ட சாதனையாளர் எல்லோருக்கும் 21 அகவை ஆகி விட்டது.
அவர்கள் பூமியில் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியும், தற்போதைய புதிய வாழ்க்கையைப் பற்றியும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தனர். எனக்கோ 120 அகவை ஆகி விட்டது. இந்த பருவத்திலும் கடுமையான ஆய்வில் ஈடுபட்டிருந்தேன். சுழிப் பெயர்ச்சி மூலம், பயணம் தொடங்கிய அதே நொடியில், நினைத்த இடத்தை அடையும் ஒளிவண்டியையும் உருவாக்கி விட்டேன்.
ஒரு முக்கிய நாளில், நான் உருவாக்கிய 3000 தலைவர்களுடனும் பூமிக்கு வந்தேன். மறுபிறவி எடுத்த தலைவர்களைக் கண்டதும், மக்கள் மகிழ்ச்சியில் கொண்டாடினார்கள். காந்திக்கு இந்தியப் பிரதமர் பதவி தேடி வந்தது. காமராசருக்கு குடியரசர் பதவியும்; அம்பேத்காருக்கு ஆளுநர் பதவியும்; நேதாசிக்கு பாதுகாப்பு அமைச்சர் பதவியும் தேடி வந்தன.ஆபிரகாம் லிங்கன், அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா, சாக்ரடீஸ், புத்தர், விவேகானந்தர், ஐன்ஸ்டீன், பெரியார் எல்லோருக்கும் மாபெரும் வரவேற்பு.
தியாகராச பாகவதர், பியூ சின்னப்பா, என்எஸ் கிருஷ்ணன், எம்ஜிஆர், சிவாஜி, எம்ஆர் ராதா எல்லோருக்கும் மீண்டும் திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன. புதிய தலைமுறையினர், நான் உயிர் கொடுத்த எல்லோரையும் மீண்டும் புகழின் சிகரத்தில் வைத்தனர். இனி நான் மட்டும் தனியாக ஞாயிறுக்கு திரும்ப வேண்டுமென சலிப்பாக எண்ணிக் கொண்டேன்.
நான் புறப்படும் நாள் வந்தது. ஒளிவண்டியில் அமர்ந்தேன். இயக்கத் தொடங்கும் முன், பின்னால் திரும்பிப் பார்த்தேன். நான் புத்துயிர் பெற்ற எல்லா தலைவர்களும் அமர்ந்திருந்தனர்."பூமியில ஏற்கெனவே புகழோட வாழ்ந்து வாழ்ந்து எங்களுக்கு சலிச்சுப் போச்சு. ஒரு சராசரி குடிமகனா ஞாயிறுல வாழ விரும்புறோம். தயவுசெஞ்சு எங்களைத் தடுக்காதீங்க" எல்லோரும் என்னிடம் கேட்டுக் கொண்டனர்.
இப்போது நானும் 3000 புகழ்பெற்றவர்களும் - பூமியிலிருந்து கொண்டு வரப்பட்ட அரிசி கோதுமை முதலிய தானியங்களை ஞாயிறின் நீலவண்ண மண்ணில் விதைத்து, உழவுத் தொழில் செய்து கொண்டிருக்கிறோம்.

1 கருத்து:
தமிழ் தரவுத்தாள் தளம்
www.tamildata.co.cc
தமிழின் முதல் மின்னணுவியல் கருவூலம்
கருத்துரையிடுக