அறிவியல் சிறுகதை
எனக்கு 30 வயது. இன்னும் திருமணம் ஆகவில்லை. என் கல்லூரித் தோழி கீதாவுக்கு இன்று திருமணம். இதில் என்ன புதுமை? எல்லோருக்கும் நடப்பதுதானே - என நீங்கள் முணுமுணுக்கலாம்.
ஆனால் இந்த திருமணத்தில் நம்பமுடியாத நிகழ்ச்சி ஒன்று நடக்கப் போகிறது என்பதை, நானோ நீங்களோ எதிர்பார்த்திருக்க முடியாது.
வழக்கம் போலத்தான். இறந்து போன வடமொழியில் மந்திரங்கள் முழங்கப்பட்டன. மாப்பிள்ளை திலகன், என் தோழிக்குத் தாலி கட்டினான்.ô திருமணம் முடிந்து, விருந்து தொடங்கியது. பந்தியில் மாப்பிள்ளையும் பெண்ணும் அருகருகே அமர, அவர்களுக்கு எதிரில் நான் அமர்ந்திருந்தேன். பம்பரமாகச் சுழன்று வேலை பார்த்ததால் கடுமையான களைப்பு வேறு.
சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னை மஞ்சள் புகை வந்து மூடியது போல் இருந்தது. களைப்பில் சற்று கண்ணயர்ந்து உறங்கி விட்டது போலும் இருந்தது. மிஞ்சிப் போனால் 2-3 நிமிடங்கள் தூங்கியிருப்பேன்.
திடீரென விழிப்பு ஏற்பட்டது. களைப்பு அறவே நீங்கிய உணர்ச்சி; ஏதோ 12 மணி நேரம் தூங்கி எழுந்தது போல் ஒரு புத்துணர்வு. எதிரில் அமர்ந்திருந்த மணமக்களைப் பார்த்தேன்.
என்ன கொடுமை இது? கீதா - திலகனுக்குப் பதிலாக வேறு மணமக்கள் என் எதிரில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களைக் கவனித்தேன்.
எனக்கு தெரிந்த முகம் எதுவுமே இல்லை. உணவு வகைகளும் முற்றிலும் மாறுபட்டிருந்தன. திருமண மண்டபம் கூட அதே மண்டபம்தான். ஆனால் இப்போது பழைய கட்டடம் போல் தோன்றியது. எனக்கு என்ன ஆயிற்று? கனவு காண்கிறேனா? கிள்ளிப் பார்த்தேன் - நனவுதான்.
அல்லது என் தோழி கீதாவுக்குத் திருமணம் நடந்தது போல் கண்டது கனவா? குழப்பம் - குழப்பங்கள். யாரிடம் என்ன கேட்பது?அப்போதுதான் கவனித்தேன்.
கீதா போல் ஒரு 52 வயது பெண்மணி. அவளின் பக்கத்தில் திலகனின் தோற்றத்தில் நடுத்தர வயது மனிதர்.
"இவங்க ரெண்டு பேரும் யாரு?" பக்கத்தில் நின்றவரிடம் கேட்டேன்.
"தெரியாதா சார்? இவங்கதான் பொண்ணோட அப்பாவும் அம்மாவும்" அந்த பெண்மணியை நெருங்கினேன்.
"மேடம், நீங்க யாரு? உங்க பேரு என்ன? என் தோழி கீதாவுக்கு இன்னைக்கு கல்யாணம். நான் தூக்கக் கலக்கத்துல மண்டபம் மாறி வந்துட்டேன்னு நினைக்கிறேன் - மன்னிச்சுக்கங்க" என முனகினேன்.
அந்த அம்மாள் என்னை வியப்புடன் பார்த்தாள்.
"என்ன பாபு? அதுக்குள்ளே மறந்துட்டியா? என் பேருதான் கீதா. நாம ஒரே காலேஜ்லத்தானே படிச்சோம்?! 30 வருசத்துக்கு முந்தி என் கல்யாணத்துக்குக் கூட வந்திருந்தே"
நான் மீண்டும் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தேன். திலகன் தொடர்ந்தார்.
"கொஞ்சம் விளக்கமா சொல்லுடீ. சாரு ஏதோ குழப்பத்துல இருக்காரு" என்றார்.
"இப்ப நடக்குறது யாரோட கல்யாணம்?" கேட்டேன்.
"என் பொண்ணுப்பா. இதையும் மறந்துட்டீயா? என் பொண்ணுக்கு நீதானே ஓவியான்னு பேரு வச்சே?!" என்றாள்.
என் வாழ்க்கையில் எல்லாமே மறந்து போய் விட்டதாக, நான் நிறைய குழப்பத்தில் இருப்பதாக... இருவருக்குமே தெளிவாக்கினேன்.
என் பெயர் பாபு என்றும், திருமணமாகி மனைவியும் ஒரு மகளும் இருப்பதாகவும் - சொல்லி, என் வீட்டில் என்னை ஒப்படைத்தாள் கீதா.
என் குழப்பத்தைப் பற்றி மனைவியிடம் தெளிவாக்கினாள். திருமணமாகாத எனக்கு மனைவியும் மகளுமா?மனைவியின் முகத்தை வியப்புடன் பார்த்தேன்.
அவளுக்கு 51 வயது இருக்கும். ஓர் இளம்பெண், அங்கு தோன்றினாள். மகள் என்று அறிமுகப்படுத்தினர். அவளையும் வியப்புடன் பார்த்தேன். தனிமையில் அமர்ந்து எண்ணங்களை ஓட விட்டேன்.
என் வாழ்வில் 30 ஆண்டுகள் காணாமல் போய் விட்டன. வீட்டில் தொங்கிய நாள்காட்டி, 30 ஆண்டுகளைத் தாண்டிய ஒரு நாளைக் காட்டியது. இதற்கு என்ன காரணம்? இயற்பியல் வல்லுநர் ஒருவரைச் சந்தித்தேன்.
"சார், நீங்க 'காலக்குழி'யில மாட்டிக்கிட்டீங்க. பிரபஞ்சத்துல முடிச்சு முடிச்சா ஒருசில இடங்கள்ல காலக்குழி தோன்ற வாய்ப்பு இருக்கு. கீதா கல்யாணத்துல உங்களை மஞ்சள் புகை மூடிச்சே. அதுதான் காலக்குழியோட கற்பனைத் தோற்றம்" என விளக்கினார் வல்லுநர்.
"அதுசரீ, காலக்குழியில மாட்டுனவங்க, மற்றவங்க பார்வைக்கு... அதாவது உலகத்தோட பார்வைக்கு காணாமப் போயிடுவாங்களே" என் அய்யத்தை எழுப்பினேன்.
"அது உண்மைதான். ஆனா உங்க வாழ்க்கையில இது தலைகீழா நடந்திருக்கு. மற்றவங்க புறப் பார்வைல இருந்து நீங்க காணாமப் போகலை. ஆனா, உங்க அகப் பார்வைல 30 வருசம் காணாமப் போயிட்டீங்க" வல்லுநர் தெளிவாக்கியதும் என் குழப்பங்கள் அகன்றன.
நான் காணாமல் போன 30 ஆண்டுகளிலும் நானும் திருமணம் முடித்து, குழந்தை பெற்று, அவளை நன்றாகப் படிக்க வைத்து, சொந்த வீடு கட்டி... எல்லாக் கடமைகளையும் சரிவரச் செய்திருக்கிறேன். ஆனால் எனக்குள் நானோ காணாமல் போய் விட்டிருக்கிறேன்.
இந்த 30 ஆண்டுகளில் என் பெற்றோர்கள் இறந்து விட்டிருந்தனர். என் தம்பி தங்கை நண்பர்கள் எல்லோருமே வயதாகி விட்டிருந்தனர். இப்போதுதான் எனக்கு, திருமண வீட்டிலிருந்து வந்தது முதல் இதுவரை நான் கண்ணாடியே பார்க்க வில்லை என்பது நினைவுக்கு வந்தது.
நிச்சயமாக நானும் வயதாகி இருப்பேன். எனக்கு 60 வயது இருக்கும். ஆண்டுகளையும் இளமையையும் தொலைத்து நிற்கும் நான் ஆளுயர கண்ணாடியில் என்னை ஆவலுடன் பார்த்தேன்.
- இது நானா?
- நன்றாக உற்றுப் பார்த்தேன்.
- முகத்தையும் உடலையும் பார்க்கப் பார்க்க...
- மாபெரும் அதிர்ச்சி.
- அதே 30 வயது இளைஞனாகவே துளிக்கூட மாறாமல் தோன்றினேன்.
- அப்படியானால் உண்மையில் காணாமல் போனது எது?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக