4.3.08

கலி முத்திப் போச்சு

மின் கடிகாரம் காலை 8.00 மணியைத் தொடும் முன்பே அந்த வங்கி சுறுசுறுப்பையும் செயற்கைக் குளிரையும் காட்டியது. வேட்டி, கருப்புச் சட்டையுடன் புதிய மேலாளராகப் பொறுப்பேற்றிருந்த கபிலன் 52 வயதிலும் 25 வயது இளைஞனின் சுறுசுறுப்பைக் காட்டிக் கொண்டிந்தார்.
தமிழம் வங்கி, அந்த பகுதியில் அது புகழ்பெற்ற வங்கியாதலால், 18 வயது முதல் 81 வரை புதிதாகக் கணக்கு தொடங்க வரிசையாகக் காத்திருந்தனர். கபிலன் அவர்களுக்குக் குளிர்பானம் வரவழைத்துக் கொடுத்து, உடனுக்குடன் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டிருந்தார்.
திறந்த வயிற்றுடன் அந்தப் பகுதியில் வெட்டியாகச் சுற்றிக் கொண்டிருப்பவன் கிச்சாமி. பேய், பெருச்சாளி என சொல்லி அந்தப் பகுதி மக்களை ஏமாற்றிப் பிழைத்து வந்தான்.
கிச்சாமிக்கு ஒருமுறை குலுக்கல் சீட்டில் (இது லாட்டரிச் சீட்டு புழக்கத்தில் இருந்தபோது நடந்த நிகழ்ச்சி) மூன்று கோடி ரூபாய் பரிசு விழுந்து தொலைத்து விட்டது. அவ்வளவு பெரிய்ய்ய்ய்ய பணத்தை என்ன செய்வது என உச்சிமுடியைப் பிய்த்துக் கொண்டான்.
இதைக் கேள்விப்பட்ட எல்லா வங்கியாளர்களும் 'நான் முந்தி, நீ பிந்தி' என தத்தம் வங்கிகளில் பணத்தை வைக்க (டெபாசிட் செய்ய) கேட்டுக் கொண்டனர். ஆனால் புகழ்பெற்ற தமிழம் வங்கியில் பணத்தை வைக்க முடிவு செய்தான் கிச்சாமி.
தமிழம் வங்கியிலிருந்து யாரும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கவில்லையே என்ற எரிச்சல் மேலிட்டது அவனுக்கு. புகைச்சலை கொஞ்சம் அடக்கிக் கொண்டு தமிழத்துக்குள் நுழைந்தான்.
கிச்சாமியை யாரும் 'வா எனவும் அழைக்கவில்லை; போ எனவும் சொல்லவில்லை. தாங்க முடியாத எரிச்சலில் மேலாளர் கபிலனைச் சந்தித்தான்.
"என்ன சார் நினைச்சிருக்கீங்க? நான் யாருன்னு தெரியுமா?" கிச்சாமி குதித்தான்.
"தெரியாதே?! படங்கள்ல நடிச்சிருக்கீங்களா?" கபிலன் அமைதியாகக் கேட்டார்.
"கிண்டல் ஆங்? லாட்டரில எனக்கு மூணு கோடி ரூபா விழுந்திருக்கு"
"அய்யோ பாவம்"
"என்ன கொய்யோ பாவம்? உங்க பேங்குலத்தான் டெபாசிட் பண்ணப் போறேன்"
"தாராளமா பண்ணிக்கோங்க! அதுக்கான படிவம் நிரப்பித் தரணுமா?"
"ஆப்ட்ரால் 100 ரூபா, 300 ரூபா டெபாசிட் பண்றவங்களுக்கு ராச மரியாதை கொடுக்கறீங்க?! ஆனா நான் கிட்டதட்ட ரெண்டு கோடி டெபாசிட் பண்ணப் போறேன். என்னைய கண்டுக்கவே இல்லை! என்ன விளையாடுறீங்களா?"
சினத்தால் தலை கிறுகிறுத்துப் போய் குதித்தான் கிச்சாமி. அவனோடு சேர்ந்து அழுக்கு நூல்துண்டும் குதித்தது. கபிலனோ மிகவும் அடக்கமாகப் பதிலளித்தார்.
"இங்க பாரு தம்பீ, இவங்க 100 ரூபா, 300 ரூபா டெபாசிட் பண்ண வந்திருக்கலாம். ஆனா இதெல்லாம் இவங்க நாள்பூரா கூலிவேலை செஞ்சு, உழைச்சு சம்பாதிச்ச பணம். அதுனாலத்தான் நான் உழைப்புக்கு மரியாதை கொடுத்துகிட்டு இருக்கேன்"
"கலி முத்திப் போச்சு" கிச்சாமி புலம்பிக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தான்.

முகவரி : ஒளிர்ஞர், 43, ஃபர்ஸ்ட் மெயின் ரோடு, ஜெயலட்சுமி நகர், திருமுல்லைவாயில், இரயில்வே ஸ்டேஷன் அருகில், சென்னை - 600 062

கருத்துகள் இல்லை: