4.3.08

கள்ளிப் பால்


சமையலுக்குப் பெயர் போனவள் என் மனைவி புவனா. ஆனால் என் நாக்கை அவளின் எந்த ருசியான சமையலும் வசீகரிக்க முடிந்ததில்லை. ஏதாவது குற்றம் கண்டுபிடித்து அவளை மட்டம் தட்டிக் கொண்டே இருப்பேன்.

ஒருநாள் சாம்பாரில் கொஞ்சம் உப்பு குறைந்து விட்டால் போதும்."சாம்பாரா இது? கள்ளிப் பால்" என்று காட்டுத்தனமாகக் கத்துவேன். பொரியலில் காரம் சற்று ஏறிவிட்டால் போதும்.

அடுத்த நொடியே சாப்பாட்டுத் தட்டு கூரையைக் கிழித்து, வானத்தில் பறக்கும். இப்படி சமையல் அறையில் செங்கோல் பிடித்து மனைவியை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த எனக்கு -சென்னையில் நல்ல வேலை கிடைத்தது. புதுச்சேரியில் இருந்து மாறி, சென்னையில் வாடகை வீடு பிடித்துக் குடியேறினேன்.

புதுச்சேரியில் தான் பார்த்து வரும் அரசுப் பணியை விட்டு விடுவாளா என் மனைவி? இப்படியாக நான் சென்னையிலும், அவள் புதுச்சேரியிலும் வனவாசம் செய்தோம்.

உணவகத்தில் சாப்பிட்டு சமாளிக்க நினைத்தால், வாயில் நுழையாத கோளாறுகள் எல்லாம் வந்தன. நெஞ்சு வலித்தது; கைகால்கள் குடைந்தன. கடைசியில் நண்பரின் ஆலோசனைப்படி, இரண்டு நாட்கள் 'சமைப்பது எப்படி?' ஆலோசனையும் எடுத்துவிட்டு; மின் குக்கர், மின் அடுப்பு, கடாய், அகப்பை முதலிய புள்ளிகளுடன் வெற்றிகரமாக சமையலைத் தொடங்கினேன்.

ஒருநாள் உப்பு குறைந்து குப்பை போல் இருக்கும். இன்னொரு நாள் குளம்பில் காரம் எக்கச்சக்கமாக எகிறி, மூக்கு முதல் இரப்பை வரை காந்தும். கரிந்துபோன பொரியல், வெந்தும் வேகாதது போன்ற காய்கறிகள்; ஒருநாள் வேகாத பருத்திக் கொட்டை சோறு, மறுநாள் பாயாசமாகக் குழைந்த சோறு - என்றெல்லாம் சாப்பிட்டு சாப்பிட்டு நொந்து கொண்டிருந்தேன்.

உணவு தயாரிக்கும்போது, கடைசி நேரத்தில் சாம்பார் பொடி காலியாகி விட்டது நினைவுக்கு வர - அலுவலகம் போகும் அவசரத்தில் - கையிருப்பில் இருக்கும் சிக்கன் மசாலா, மட்டன் மசாலா கலக்கி விந்தை சாம்பார் வைத்து - நாக்கிலும் சுவையிலும் செம அடி வாங்கிய நாட்களும் உண்டு.

அப்போதுதான் சமையலின் என் மனைவியைக் கொடுமைப்படுத்திய செயல்கள் ஒவ்வொன்றாக நினைவில் குதித்து நடனம் ஆடின. அவளிடம் எட்டி வீசிய சாப்பாட்டுத் தட்டுகளும், கூரையில் பிளாச்சென சிதறிய இரசமும் என்னைக் கேலியாகப் பார்த்து சிரித்தன.

இப்போது புவனாவின் சென்னை மாற்றலுக்காக (டிரான்ஸ்பர்) நாயாக பேயாக அலைந்து கொண்டிருக்கிறேன். அப்படிக் கிடைத்து விட்டால், அவள் பச்சைத் தண்ணீர் என்ன, கள்ளிப் பாலைத் தந்தாலும், அதை மலைத் தேனாக நினைத்துப் பருக வேண்டுமென ஏங்குகிறேன்.

ஆனால் இதுவரைக்கும் மாற்றல் கிடைக்கவில்லை. எப்படியோ என் நண்பர்கள் நடுவில் குப்பையான சமையலுக்குப் பெயர் போனவன் ஆகி விட்டேன்.

1 கருத்து:

ILA (a) இளா சொன்னது…

hmm. பட்ட பின்னாடிதான் எல்லாம் தெரியும் போல..