பண்டிகைகள் வந்தால் பட்டுச் சேலை கேட்டு கண்களைக் கசக்க வேண்டும். பக்கத்து வீட்டுக்காரி அணிந்திருக்கும் நகைகளைத் தானும் அணியும்வரை தூக்கம் வராமல் தவிக்க வேண்டும்.
ஆம் எனக்கு சராசரி மனைவி போதும். ஏனெனில் நானும் உண்டு, பருகி, தூங்கி எழும்பும் ஒரு சராசரி கணவன்தான்.
ஆனால் விதியைப் பாருங்கள். எனக்கு கிடைத்திருக்கும் மனைவி மகா அறிவுஜீவி. கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்று, ஒரு கல்லூரியில் பேராசிரியையாகப் பணிபுரிகிறாள்.
என்ன செய்வது? நானும் தலைகீழாக எவ்வளவோ தந்திரங்கள் செய்துவிட்டேன். அவளின் ஒரேஒரு கெட்டப் பழக்கத்தைத்தான் என்னால் மாற்ற இயலவில்லை.
"புவனேஸ்வரி, நீ நிறைய படிச்சிருக்கே. நல்ல வேலையில இருக்கே. கைநிறைய சம்பாதிக்கிறே. ஆனா உன்கிட்ட ஒரே ஒரு கெட்டப் பழக்கம்தான்"
"கெட்டப்ப் பழக்கமா? நீங்க உளர்றது எதுவுமே புரியலை" அடப்பாவி, நான் உளறவா செய்யுறேன்?
"ஹீஹீ புவனேஸ்வரி, நான் என்ன சொல்ல வர்றேன்னா... ரிட்டயர் ஆகுற மட்டும் உனக்கு கவலையில்லை. நல்ல வேலையில செட்டில் ஆயிட்டே. அதுக்கப்புறமும் எதுக்கு கண்ட கண்ட புக்ஸ்செல்லாம் படிக்குறே? ஒரு மெகசின் விடாம மேயுறே. டிவி, ரேடியோ, இன்டர்நெட்டுன்னு ஒரு நியூசைக் கூட விட்டு வைக்க மாட்டேங்குறே. இதுக்கு மேல படிச்சு என்னத்தைக் கிழிக்கப் போறே? ஏன் டைமை வேஸ்ட் பண்றே? அக்கடான்னு சும்மா இருக்கலாம்லியா?" என்று புத்திசாலித் தனமாக டயலாக்குகளை அள்ளி வீசினேன்.
சிலிர்த்துக் கொண்டாள் புவனேஸ்வரி. கோபத்தால் மூக்குநுனி சிவந்தது. தன் தங்க விளிம்புக் கண்ணாடியை கழற்றி, என்னை ஆதிவாசி போல ஒரு பார்வை பார்த்தாள்.
மனைவியின் கூர்மையான பார்வை பட்டவுடன் 60 கிலோ எடையுள்ள என் உடம்பின் ஒவ்வொரு கிலோ மாமிசமும் நடுங்கியது. என்னைப் பொருட்படுத்தாமல் மீண்டும் தகவலை மேயத் தொடங்கி விட்டாள் புவனேஸ்வரி.
என்னைப் பொறுத்தவரை புத்தகம் என்றாலே பாகற்காயின் மறுபிறவி. பத்திரிகைகள் நடமாடும் வேப்பங்காய்கள்.
என் இல்லத்தரசி படித்துப் படித்து பொது அறிவை வளர்ப்பதால் வானத்திலுள்ள மேகங்கள் தண்ணீருக்குப் பதிலாக பெட்ரோலை மழையாகப் பொழிந்துவிடாது என்பது என் அரிய கண்டுபிடிப்பு.
இந்த ஞாயிற்றுக் கிழமை 24 மணி நேரமும் படுக்கையில் உருண்டு வாயில் நொறுக்குத் தீனியுடனும் கையில் ரிமோட் கன்ட்ரோலுடனும் கிரிக்கெட்டை ஒரு பிடி பிடிக்கலாம் என ஐநாவுக்கு இணையாக ஒரு திட்டம் தீட்டியிருந்தேன்.
கெடுத்தாள் என் துணைவி. புவனேஸ்வரி கெஞ்சிக் கேட்டுக் கொண்டதன் பேரில் - அவள் மிரட்டலுக்குப் பயந்துதான் என்பதுதான் உண்மை - எழும்பூர் கன்னிமாரா நூலகத்திற்கு இருவரும் வந்திருந்தோம்.
வேறு கிரகத்திலுள்ள பொருட்களைப் போல அங்கிருந்த நூல்கள் எனக்குத் தோன்றின. புவனேஸ்வரியோ பல பத்திரிகைகளைப் படிப்பதும் குறிப்பெடுப்பதுமாக என் வயித்தெரிச்சலையும் இரப்பை எரிச்சலையும் குடல் எரிச்சலையும் சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டாள்.
அப்பாடா கன்னிமாராவை விட்டு ஒருவழியாக வெளியே வந்தபோது, நாகரீகத் தோற்றத்தில் ஒரு மனிதன் என்னைச் சந்தித்தான்.
"எக்ஸ்மியூஸ்மீ சார், என்கு கொஞ்சம் டமில் தெர்யும். என்கு சொந்த ஊர் பெங்க்ளூரு. மெட்ராஸ் டூர் வந்தேன். பட் பர்சை மிஸ் பண்ணிட்டேன். ஊருக்குப் போக ரூபா இல்லே. 300 ரூபா பஸ் டிக்கெட்"
என் வெள்ளை இதயத்தில் கருணை ஆர்ட்டீசியன் பீறிட்டது. என் ஈரல் இளகி நடுச் சாலையில் இரத்தமாகக் கொட்டும் அளவுக்கு அந்த நாகரீக மனிதன் மேல் மனம் இரங்கினேன்.
என் சட்டைப் பையிலிருந்து 500 ரூபாய் நோடை எடுத்து அவனிடம் கொடுக்க முனைய - அடப்பாவி - என் மனைவி வந்து தடுத்து விட்டாள். நாகரீக மனிதனோ விடாப்பிடியாகப் பேசினான்.
"அவரு கருணையோட தர்ற பணத்தை நீங்க ஏன் மேடம் தடுக்கிறீங்க?"
"இது கருணை கிடையாது. இளிச்சவாய்த்தனம்" என் மனைவி நெத்தியடி கொடுத்தாள்.
"ப்ளீஸ் மேடம் நான் டீசன்டான ராயல் ஃபேமில் மேடம். இந்த 500 ரூபாயை ஊருக்குப் போய் மணியார்டர் அனுப்பிச்சுடுறேன். இல்லன்னா... இப்பவே ஒரு செக் கையெழுத்து போட்டு தந்துட்டுப் போறேன். மூணு நாளு கழிச்சி பணம் எடுத்துக்கங்க"
நாகரீகன் சொல்வது எனக்கு கண்ணியமாகவே பட்டது. என் மனைவியோ விடாப்பிடியாக நின்றாள்.
"மிஸ்டர், நீங்க மணியார்டரும் அனுப்ப வேணாம். செக்கும் கிழிக்க வேணாம். இப்பவே எங்க கூட வாங்க. உங்களுக்கு நானே டிக்கெட் எடுத்து தர்றேன்"
"உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம் மேடம்? நீங்க பணத்தை மட்டும் கொடுங்க. டிக்கெட் நான் எடுத்துக்கறேன். நீங்களாவது மேடத்துகிட்ட எடுத்துச் சொல்லுங்க சார்"
பாவம் என்னிடன் சிபாரிசு செய்தான். நான் சொல்லி எதைக் கேட்டிருக்கிறாள் என் இல்லத்தரசி?
"ஹலோ மிஸ்டர். வேணும்னா உங்க ஊருக்கு நானே டிக்கெட் எடுத்துத் தர்றேன். இல்லைன்னா... இதோ இந்த ஸ்டேஷன்ல எனக்குத் தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் இருக்காரு. அவர்கிட்ட உங்க பணம் காணாம போயிட்டதா ஒரு புகார் எழுதிக் கொடுங்க. நீங்க கேட்ட பணம் நான் தர்றேன்"
ராயல் ஃபேமிலி மனிதனுக்கு முகத்தில் வியர்த்து விட்டது. ஏதோ கேட்கக் கூடாததை கேட்டு விட்டது போல் பதறிவிட்டான்.
"மேடம், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. பயங்கர பசி. நான் இந்த ஓட்டல்ல போய் ஒரு டீ குடிச்சிட்டு வந்திடுறேன்" என்று சொல்லி விட்டுப் போனான்.
போனவன் போனவன்தான். இதுவரை எங்கள் கண்ணில் படவில்லை.
"பார்த்தீங்களா? நான் இல்லன்னா... நீங்க உடுத்திருக்கிற வேட்டியையும் உருவி கொடுத்திருப்பீங்க. உங்க பொது அறிவை வளர்த்துக்காததுனாலத்தான் இவன்கிட்ட ஏமாற இருந்தீங்க. போன வாரம் பத்திரிகைல இப்படிப்பட்ட ஏமாத்துக்காரங்களைப் பத்தி கட்டுரை படிச்சேன்...
"நம்ம வாழ்க்கை முன்னேற... நாம ஏமாறாம இருக்க... நெறைய படிக்கணும். பொது அறிவை வளர்த்துக்கணும்" என நீண்ட சொற்பொழிவு கொடுத்தாள் மனைவி புவனேஸ்வரி.
நான் முடிவு செய்து விட்டேன். எனக்கு சராசரி மனைவி வேண்டாம். எத்தனை பிறவி எடுத்தாலும் புவனேஸ்வரிதான் என் இல்லத்தரசியாக முடிசூட வேண்டும்.
முகவரி : ஒளிர்ஞர், 43, ஃபர்ஸ்ட் மெயின் ரோடு, ஜெயலட்சுமி நகர், திருமுல்லைவாயில், இரயில்வே ஸ்டேஷன் அருகில், சென்னை - 600 062 . 9884992550

5 கருத்துகள்:
all r very nice Mr. Robert
thank you dear
nice.
nice.
உங்க ஒவ்வொரு பதிவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கு.
கருத்துரையிடுக