23.8.07

மனைவியை வசீகரிக்கும் மாய மோதிரம்

தவிட்டு நிறத் தாளில் அச்சிடப்பட்டிருந்த அந்த துண்டு விளம்பரம் 'ரம்பம் ரமணனின்' கண்களில் பட்டு தொலைத்தது. அதைப் படித்தவுடன் அவரின் இரு கண்களும் சோடியம் விளக்கு போல் மின்னின.

"உங்கள் மனைவி எப்போதும் நச்சரித்துக் கொண்டிருக்கிறாளா? உங்களை அடிக்கிறாளா? உதைக்கிறாளா? திட்டுகிறாளா? நாங்கள் தயாரித்திருக்கும் 24 கேரட் வசீகர தங்க மோதிரத்தை விரலில் அணிந்து கொள்ளுங்கள்.

இதனால் உங்கள் மனைவி நாள்தோறும் காலையில் எழுந்தவுடன் உங்கள் காலைத் தொட்டு கும்பிடுவாள். நீங்கள் ஆணையிட்டால், உங்கள் கால்களைப் பிடித்து விடுவாள். எருமை மாட்டைக் குளிப்பாட்டுவது போல் உங்கள் முதுகைத் தேய்த்துக் குளிப்பாட்டுவாள்.
உங்கள் ஆசை மனைவி நீங்கள் கூப்பிட்ட இடத்துக்கு எல்லாம் நன்றியுள்ள நாய்போல் குரைக்காமல், கடிக்காமல் வாலை ஆட்டிக் கொண்டே வருவாள்.

இந்த வசீகர தங்க மோதிரத்தை உங்களுக்கு இலவசமாக அனுப்பிக் கொடுக்க எங்கள் தேவதையான குட்டிச் சாத்தான் கட்டளை இட்டுள்ளது. இருந்தாலும் குட்டிச் சாத்தனைத் திருப்திப்படுத்த பூசை வைக்க வேண்டுமல்லவா?

அந்த பூசை படையல் செலவுக்காக வெறும் 10 ஆயிரம் ரூபாய் மட்டும் அனுப்பி வையுங்கள். மோதிரத்துக்காக நயா பைசா வேண்டாம். 24 கேரட் வசீகர மோதிரம் முற்றிலும் இலவசம். டிடி அல்லது மணியார்டர் அனுப்ப வேண்டிய முகவரி
சோனாடு சோத்தான் குருமடம், பெட்டி எண் : 000 000, கயா

"ஆகா ஓகோ, துண்டு விளம்பரத்தைக் கண்டவுடன் துள்ளிக் குதித்தார் ரம்பம் ரமணன். "என் பொண்டாட்டியோட கொட்டத்தை அடக்குறதுக்கு வழி பிறந்திடுச்சி"

ஆதம்பாக்கம் முதல் கல்பாக்கம் வரை - தனக்கு தெரிந்த நண்பர்களிடம் பல்லிளித்து, சிபாரிசுக்கு ஆள்பிடித்து, வட்டிக்காரர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, விளம்பர முகவரிக்கு பணத்தை அனுப்பி வைத்தார் ரம்பம் ரமணன்.

மூன்று நாளிலேயே பொட்டலம் வந்துவிட்டது. பொட்டலச் செலவுக்காக அஞ்சல் நிலையம் 30 ரூபாய் தனியாக கறந்து விட்டது.

பொட்டலத்தை ஆவல் கூச்சலிட பிரித்தார் ரமணன். அட்டகாசம் போங்கள். 24 கேரட்டில் மஞ்சள் நிறத்தில் மாற்று குறையாத பிளாஸ்டிக் மோதிரம்.

ரம்பம் ரமணனின் முகம் போன போக்கைக் காண எத்தனை பிறவி எடுத்தாலும் தாங்காது. சரி இந்த பிளாஸ்டிக் மோதிரத்திலாவது குட்டிச் சாத்தானின் வசீகர சக்தி இறங்கியிருக்கலாம் என்ற நப்பாசையில் விரலில் அணிந்து கொண்டார் ரமணன்.

தற்போது கிடைத்திருக்கும் தகவல் :

பூசை வைத்து குட்டிச் சாத்தானின் அருள்பெற்ற இந்த வசீகர மோதிரம் ரம்பத்தின் மனைவியை வசீகரித்ததோ என்னவோ தெரியாது. ஆனால் கடன் கொடுத்த வட்டிக்காரர்களை வசீகரித்து விட்டது.

வீட்டைச் சுற்றிலும் கந்து வட்டிக்காரர்களின் கூட்டமும் செந்தமிழில் அன்பு மிரட்டலும் நாள்தோறும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன.

இதனால் ரம்பம் ரமணனின் மனைவி, கடாய் கற்பகம் தன் கணவரின் கால்களைப் பிடித்து விடாமல் இருந்தாலும், தன் மணவாளனின் திருக் கால்களை உடைக்காமல் விட்டிருப்பது புண்ணியம்.

முகவரி : ஒளிர்ஞர், 43, ஃபர்ஸ்ட் மெயின் ரோடு, ஜெயலட்சுமி நகர், திருமுல்லைவாயில், இரயில்வே ஸ்டேஷன் அருகில், சென்னை - 600 062 phone - 9884992550

கருத்துகள் இல்லை: